பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட தமிழர் விளையாட்டுவிழா 2025 - மெல்பேர்ண் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2025

பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட தமிழர் விளையாட்டுவிழா 2025 - மெல்பேர்ண்


வங்கக்கடலில் வீரகாவியமாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரிலுள்ள East Burwood Reserve மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 


சனிக்க்கிழமை 25 - 01 - 2025 அன்று  காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை இளைய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. ஐங்கரன் இந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை திருமதி. தேவறூபி சுதாகரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு செல்வி காவிக்கா சொலமன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவில் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் தொடர்பான சிறு விளக்கக் கருத்துக்களுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.


சிறுவர்களுக்கான தவளைப்பாய்ச்சல், சாக்கு ஒட்டம், சங்கீதக் கதிரை உள்ளிட்ட இன்னும் பல மெய்வல்லுனர் போட்டிகளும் மற்றும் பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், குண்டு எறிதல், 100 மீற்றர் ஓட்டப் போட்டிகள் மற்றும் அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப்போட்டிகள் ஆகிய விளையாட்டுக்கள் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.


அணிகளுக்கிடையிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளும் இறுதியாட்டமும் ஏற்கனவே 04 - 01 - 2025 அன்று நடைபெற்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது.


மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்ட சிறுவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன் போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. 


கரப்பந்தாட்டப் போட்டியில் இறுதியாட்டத்திற்குத் தெரிவான அணிகளான NTSC White அணிக்கும் NTSC Blue அணிக்குமிடையிலான இறுதியாட்டத்தில் NTSC White அணி வெற்றியீட்டி வெற்றிக் கேடயத்தை தனதாக்கிக்கொண்டது.


கயிறு இழுத்தல்ப் போட்டியில் பல அணிகள் பங்குபற்றியிருந்தன. இறுதியாக செந்தணல் அணி வெற்றியீட்டியிருந்தது.  


ஏற்கனவே நடந்து முடிந்த துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் இறுதியாட்டத்திற்குத்தெரிவான Sivasreegal அணிக்கும் Dandy squit அணிக்குமிடையிலான இறுதியாட்டத்தில் Sivasreegal  அணி வெற்றியீட்டி வெற்றிக்கேடயத்தை தனதாக்கிக்கொண்டது. 


சமநேரத்தில் வழமைபோல தாயக உணவுவகைகளான தோசை,  வடை,  முதலானவற்றோடு மதிய உணவாக கடலுணவுகள் கலந்த ஒடியற்கூழும் மாலை உணவாக கொத்துரொட்டியும் நாவிற்கினிய  இன்னும்பல உணவுவகைகளும் பலூடா உள்ளிட்ட  குளிர்பானங்கள் மற்றும் தேனீர்  என்பனவும் காலையிலிருந்து மாலைவரை விற்பனைசெய்யப்பட்டன. 


இறுதியாட்டத்தில் பங்குபற்றிய  அணிகளின் விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு அணிகளுக்கான வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டதையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு மாலை 7.45 மணியளவில் தமிழர் விளையாட்டுவிழா 2025 நிகழ்வுகள் யாவும்  இனிதே நிறைவேறியது.

































No comments:

Post a Comment

Post Bottom Ad